ஸத்குரு என்னை அழைக்கிறார்.
1955ஆம் ஆண்டில் எனக்குப் பூணூல் சடங்கு நடைபெற்ற அதே நேரத்தில், எனது தமையனாரின் மகள் மரணமடைந்தாள். அவளிடம் அளவற்ற பிரியம் வைத்திருந்த என்னை இது பலமாகத் தாக்க, அந்தத் தாக்குதலிலிருந்து உண்மைப் பொருளைத் தேடும் நாட்டம் என்னிடம் தோன்றியது. இப்போது திரும்பவும் நினைத்துப் பார்க்கும்போது, அது உண்மையிலேயே எனக்குப் ‘பிரம்மோபதேசமே’ ஆரம்பத்தில் ஏற்பட்ட மனமுறிவிலிருந்து சற்று மீண்டதும், அதைத் தொடர்ந்து என்னுள் பலவித முக்கியமான கேள்விகள் எழ ஆரம்பித்தன. “எல்லாவற்றிற்கும் மேலான ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா? அதன் இயல்பு என்ன? அதனோடு எப்படித் தொடர்பு கொள்ளுவது? வாழ்வு என்பது என்ன? சாவு என்பது என்ன? ஏன் மனிதன் சாவிலிருந்து தப்ப வழி கண்டுபிடிக்கவில்லை? காலம் என்றால் என்ன?” என்பதைப் போல மேலும் பல கேள்விகள் எழுந்தன. தக்க பதில் கிடைக்காமலே 1960 ஆம் ஆண்டுவரை எனது தேட்டமும் தொடர்ந்து நடந்தது.
அந்த ஆண்டில், ஒருநாள் மாலைவேளையில் நான் உலவிக் கொண்டிருக்கும்போது, எனக்கு உள்ளே எங்கோ எதுவோ அதிசயமாக நிகழ்ந்தது. ஒரு கணத்தில் எல்லாக் கேள்விகளும் மறைந்து சாந்தி நிலவியது. அந்தக் கேள்விகளுக்கு இனி இடமில்லாதது போலும், இனிமேல் அவைகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லாதது போலும் எனக்குத் தோன்றியது. ஏறக்குறைய அதே சமயத்தில், எனது முயற்சியின்றியே என் கைக்குக் கிடைத்த ஸென் (Zen) என்பதைப்பற்றிய புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஸ்டோரி (Zatori) அல்லது ‘உள்ளொளி பெறுதல் என்பதைப் பற்றிய விளக்கம் எனது அனுபவத்தை மிகவும் ஒத்திருந்தது. அதைப் படித்து, மகிழ்வு கலந்த வியப்பும் நம்பிக்கையும் அடைந்தேன். எனது ஆத்மீக நாட்டம் மேலும் வலுத்தது.